தேடல்

அனுமதியின்றி செயல்பட்ட 10 சாயப்பட்டறைக்கு "சீல்'

குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில், அரசு அனுமதியின்றி செயல்பட்ட பத்து சாயப்பட்டறைகளை, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு செய்து, அதிரடியாக, சீல் வைத்தனர்.குமாரபாளையம் சுற்று வட்டார பகுதியில், அனுமதியின்றி சாயப்பட்டறை இயங்குவதாகவும், சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை நேரடியாக காவிரி ஆறு மற்றும் நிலத்தடியில் வெளியேற்றி வருவதாகவும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரனுக்கு புகார் வந்தது.அவரது உத்தரவின் பேரிலும், உயர்நீதி மன்றத்தின் ஆணைப்படியும், மாவட்ட மாசுக்கட்டுபாட்டு அதிகாரி கோகுல்தாஸ் தலைமையில், ஆர்.டி.ஓ., கவிதா, தாசில்தார் சத்யநாராயணன் மற்றும் வருவாய் துறையினர், குமாரபாளையம் சுற்று வட்டாரப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி, இடைப்பாடி சாலை, காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், குளத்துக்காடு, பவர் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. அப்போது, அரசு அனுமதியின்றியும், சுத்திகரிக்கப்படாமல் சாயப்பட்டறை கழிவு நீரை நேரடியாக காவிரி ஆற்றிலும், நிலத்தடியிலும் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.அதை தொடர்ந்து, பத்து சாயப்பட்டறைகளில், 55 நூல் பிழியும் சிட்டி மரங்கள், மிஷின், ஏழு கேபின்கள், ஆறு ஆயில் இன்ஜின்கள், ஏழு ஜெனரேட்டர், நான்கு பாய்லர் ஆகியவற்றுக்கு, சீல் வைக்கப்பட்டது. மேலும், அரசு வைக்கப்பட்ட சீலை அகற்றி தொடர்ந்து சாயபட்டறைகளை இயக்கினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.