நெய்வேலி:இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடியே 70 லட்சம் டன் நிலக்கரி
இறக்குமதி செய்யப்படுகிறது என என்.எல்.சி., சுரங்கத் துறை இயக்குனர்
சுரேந்தர் மோகன் பேசினார்.கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இந்திய பொறியாளர்
கழகம் சார்பில் சுரங்கத் துறையில் பின்பற்றப்படுவதற்காக சமீபத்தில்
வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறை குறித்த ஆய்வரங்கம் நேற்று
நடந்தது.
என்.எல்.சி., திட்ட இயக்குனர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயல்
இயக்குனர் ராமலிங்கம், முதன்மை பொது மேலாளர் குமாரசாமி, இந்திய சுரங்கத்
துறை துணை கட்டுப்பாட்டு அதிகாரி ஜான்கிட், வெடி மருந்து கட்டுப்பாட்டுத்
துறை அதிகாரி சற்குணராமன் முன்னிலை வகித்தனர்.கருத்தரங்கில் என்.எல்.சி.,
சுரங்கத்துறை இயக்குனர் சுரேந்தர் மோகன் பேசியதாவது:உலக அளவில் 19 ஆயிரத்து
700 கோடி டன் நிலக்கரி வளத்துடன் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு
53 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்வதன் மூலம் இந்தியா 3ம் இடத்தைப்
பெற்றுள்ளது.இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடியே 70 லட்சம் டன் நிலக்கரி
இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் 67 சதவீத மின் தேவைகள் நிலக்கரியை
பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனல்மின் சக்தி வாயிலாக பெறப்படுகிறது. இந்திய
நிலக்கரி உற்பத்தியில் 81 சதவீதம் திறந்த வெளி சுரங்கங்கள் மூலம்
கிடைக்கிறது.வரும் 20 ஆண்டுகளில் நம் நாட்டின் நிலக்கரி தேவை 3 மடங்காக
உயரும் வாய்ப்பு உள்ளது. 2014ம் ஆண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்திக்கும்
தேவைக்கும் இடையேயான இடைவெளி 15 கோடி டன்னாக இருக்கும்.
மேலும் 12வது திட்டத்தின் முடிவில் பழுப்பு நிலக்கரி மூலம் பெறப்படும் மின்
உற்பத்தி 7,491 மெகா வாட்டாகவும் 13வது திட்ட காலத்தின் முடிவில் 11
ஆயிரத்து 91 மெகா வாட்டாகவும் இருக்கும் வகையில்
திட்டமிடப்பட்டுள்ளது.
என்.எல்.சி.,யில் விரைவில் இரண்டாம் அனல்மின் நிலைய
விரிவாக்கத்தின் வாயிலாக 500 மெகாவாட் மின்சாரம் மற்றும் தமிழக அரசுடன்
இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தூத்துக்குடி அனல்மின் திட்டத்தின் வாயிலாக
1,000 மெகா வாட் மின்சாரமும் கூடுதலாகக் கிடைக்கும்.இவ்வாறு சுரேந்தர்
மோகன் பேசினார்.
