தேடல்

ஊரக வேலையில் இறந்தவர் பெயரில் முறைகேடு :அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே எஸ்.கீரந்தையில், தேசிய ஊரக (100 நாள்) வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இறந்தவர், வெளிநாட்டில் உள்ளோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்ததாக தாக்கலான வழக்கில், அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.எஸ்.கீரந்தை ஊராட்சி துணைத் தலைவர் கஸ்தூரி தாக்கல் செய்த மனு: தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலாடி அருகே எஸ்.கீரந்தை ஊராட்சியில், இவ் வேலைக்கான வருகைப்பதிவேட்டில் (மஸ்டர்ரோல்) சண்முகவேல், வேலுச்சாமி, ராமகிருஷ்ணன், திருஞானம் உட்பட சிலரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வங்கி மூலம் கூலி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் யாரும் வேலை செய்யவில்லை.ஊராட்சித் தலைவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. சண்முகவேல் 2011 மே 1 ல் இறந்துவிட்டார். அவரது பெயரும் உள்ளது. பயனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கியபோது, வீரபாண்டி என்பவர் துபாயில் இருந்தார். அவரது பெயரையும் வருகைப்பதிவேட்டில் சேர்த்துள்ளனர். இம்முறைகேடுகள் குறித்து, நான் ராமநாதபுரம் கலெக்டரிடம் புகார் செய்தேன். மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஜி.எம்.அக்பர் அலி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ராகவாச்சாரி, அரசு வக்கீல் கிருஷ்ணதாஸ் ஆஜராகினர். அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை20க்கு ஒத்தி வைத்தனர்.