தேடல்

ஐந்து மாத குழந்தை மர்ம மரணம் : உறவினர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி

சென்னை : ஐந்து மாத குழந்தை மர்மமான முறையில் இறந்ததில், உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனையில், குழந்தையின் தலையில் பலமாக அடிபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவில் வசிப்பவர் கோமதி. இவருடைய முதல் கணவர் மோகன். அவரை பிரிந்து அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து மாதத்துக்கு முன் பிறந்த குழந்தை கோகுல். தங்கை ராஜலட்சுமியிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு கடந்த புதனன்று மனைவியுடன் ராஜேஷ் வெளியே சென்றார்.இரவு எட்டரை மணியளவில், குழந்தை திடீரென காணாமல் போனது. மறுநாள் அதிகாலை வீட்டின் பின்புறமுள்ள கால்வாயில் பிணமாக கிடந்தது. குழந்தையின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் விசாரித்து வருகிறார். ஐந்து மாத குழந்தை என்பதால், குழந்தை தவழ்ந்தோ நடந்தோ செல்ல முடியாது. யாராவது தான் கடத்தி சென்று இருக்க வேண்டும் என்றும், முன்பகையின் காரணமாக, குழந்தை கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. குழந்தையின் உடலில் ஊசி போட்ட தடம் இருப்பதால் நரபலியாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் ஒரு பக்கம் வலுப்பெற்றுள்ளது. பிரேத பரிசோதனையின் முதல் கட்ட தகவலில், குழந்தையின் தலையில் பலமாக அடிபட்ட தடம் உள்ளது. இதுகுறித்து, ராஜேசின் தங்கை ராஜலட்சுமி, கோமதியின் முன்னாள் கணவர் மோகன் மற்றும் கணவர் ராஜேஷ் மற்றும் அக்கம்பக்கத்தாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.