கம்பம் : கம்பமெட்டு, குமுளி வழியாக கேரளாவிற்கு வெடிபொருட்கள் தொடர்ந்து
கடத்தப்படும் அதிர்ச்சி தகவல் தமிழக கியூ பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய
வந்துள்ளது. தமிழக எல்லை நகரங்களான தேனி மாவட்டம் கம்பமெட்டு, குமுளி
வழியாக தமிழகத்தில் இருந்து, வெடிபொருட்களான டெட்டனேட்டர்கள், நைட்ரேட்
உப்புகள், ஜெலட்டின் குச்சிகள் அதிகளவில் கடத்தப்படுகின்றன. சில
நாட்களுக்கு முன் குமுளி சோதனை சாவடியில்,கேரள வணிகவரித்துறையினர்
வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். சேலத்தில் இருந்து கொண்டு செல்வதாக
கைதானவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.தகவலின் பேரில் தமிழக கியூ பிரிவு
போலீஸ் குழு, பீர்மேட்டில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள்
கடத்தியவரிடம் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவில் மலப்புரம் உள்ளிட்ட சில
இடங்களிலும், விசாரணை மேற்கொண்டனர். இதில், தமிழகத்தில் இருந்து தொடர்ந்து
வெடிபொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.ஒரு மூடை அம்மோனியம்
நைட்ரேட்டுக்கு 17 ஆயிரத்து 500 ரூபாய் கிடைத்து உள்ளது. ஒவ்வொரு முறையும்
60 முதல் 70 மூடைகளை கடத்தி உள்ளனர். வெடிபொருட்கள் எதற்காக
பயன்பத்தப்படுகிறது, என்பதில் வேறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதாக, கியூ
பிரிவு போலீசார் கூறுகின்றனர். தேனி மாவட்டத்திலும் குறிப்பிட்ட சில
நபர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம், என சந்தேகிக்கின்றனர்.
