தேடல்

கமுதி அருகே அரசு பள்ளி மாணவர்கள் 78 பேர் மயக்கம்: திறந்தவெளி சமையல் காரணமா?

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, டி.புனவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியில், திறந்தவெளியில் சமைத்த உணவை சாப்பிட்ட, 78 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.

இந்த பள்ளியில் நேற்று மதியம் சத்துணவை, தொடக்கப் பள்ளி மாணவர்கள், 78 பேர் சாப்பிட்டனர். சாப்பாட்டில் பல்லி விழுந்ததாக கூறியதையடுத்து, பிற மாணவர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தனர். திடுக்கிட்ட பள்ளி ஆசிரியர்கள், மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து, 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம், கமுதி அரசு மருத்துவமனையில், மாணவர்களை அனுமதித்தனர்.

மாணவர்கள் கூறுகையில்,மரத்தடியில் தான் சமையல் செய்கின்றனர். முட்டையில் சில, அழுகிய நிலையில் இருந்தன. அதை ஒதுக்கி வைத்து விட்டனர் என்றனர். தலைமை ஆசிரியர் மணிமேகலை கூறியதாவது: மாணவர்கள் பல்லி விழுந்ததாக கூறியவுடன், உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், பல்லியை யாரும் பார்க்கவில்லை. அழுகிய முட்டைகள் குறித்து எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.