குடும்பத் தகராறில் மனைவி காதை கடித்துத் துப்பிய கணவர் கைது

காரைக்கால் :காரைக்காலில், குடும்பத் தகராறில், மனைவியின் காதை கடித்துத் துப்பிய கணவனை, போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் புதிய பஸ் நிலையம் திரவுபதி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்,33. இவர் மனைவி லட்சுமி,25. இவர்களுக்கு, 4 பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும், காரைக்கால் புதிய பஸ் நிறுத்தம் அருகில், தட்டுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். குடிப்பழக்கம் உள்ள ராஜ், மனைவி லட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இதனால், லட்சுமி தனது பிள்ளைகளை, நிரவியில் உள்ள தாய் வீட்டில் தங்க வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, லட்சுமி பழக்கடையை மூடிக் கொண்டிருந்தார். அங்கு வந்த ராஜ், குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடை@ய, ரோட்டிலேயே தகராறு ஏற்பட்டுள்ளது.மோதல் முற்றியதில், ராஜ் தன் மனைவி லட்சுமியின் இடது காதை கடித்து துப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த லட்சுமியை, பொதுமக்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, துண்டிக்கப்பட்ட காதை ஒட்ட வைக்க முடியவில்லை.இதுகுறித்த புகாரின்படி, மனைவியின் காதை கடித்துத் துப்பிய கணவர் ராஜ் மீது, போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.