கோப்பை வென்றது இங்கிலாந்து * பாகிஸ்தானுக்கு அடி

துபாய்: நான்காவது ஒரு நாள் போட்டியில் பீட்டர்சன் சதம் அடிக்க, இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 4-0 என முழுமையாக கைப்பற்றியது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. முதல் மூன்று போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டி துபாயில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி(58), அசாக் சாபிக்(65), கேப்டன் மிஸ்பா(46) கைகொடுத்தனர். 50 ஓவரில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக்(4) ஏமாற்றினார். கெவின் பீட்டர்சன் மீண்டும் சதம்(130) அடித்து அசத்தினார். கீஸ்வெட்டர் 43 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 49.2 ஓவரில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பீட்டர்சன், தொடர் நாயகனாக குக் தேர்வு செய்யப்பட்டனர்.