தேடல்

காதல் ஜோடிக்கு போலீஸ் முன்னிலையில் நிச்சயதார்த்தம்

தேவகோட்டை:திருமணத்திற்கு வந்திருந்த இருவரிடையே காதல் மலர்ந்தது.திருமணம் செய்ய மறுத்ததால் போலீசார் முன்னிலையில் நிச்சயம் செய்யப்பட்டது.தேவகோட்டை அருகேயுள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து- மீனா தம்பதி மகன் பெரியகருப்பன் என்ற பாட்சா 26. சில நாட்களுக்கு முன்பு அரண்மனை சிறுவயலில் நடந்த உறவினர் திருமணத்திற்காக பாட்சா சென்றிருந்தார். அதே திருமணத்திற்கு அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த கண்ணன் பஞ்சவர்ணம் தம்பதி மகள் நித்யா19 வந்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. மறுநாள் பாட்சா சொந்த ஊருக்கு சென்று விட்டார்.நித்யா நகைகளுடன் பாட்சா வீட்டிற்கு சென்றார். பாட்சா வீட்டில் நித்யாவை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பினர். நித்யா குடும்பத்தினர் பாட்சா வீட்டிற்கு சென்று திருமணம் செய்யுமாறு கூறினர்.இதனை தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால் நித்யா தரப்பினர் தேவகோட்டை பெண்கள் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜோசப்பின் அமலராணி இரு குடும்பத்தாரையும் அழைத்து பேசினார்.பாட்சா குடும்பத்தினர் மூன்று மாதம் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறினர். நித்யா தரப்பினர் உடனே திருமணம் செய்ய வேண்டும் என்றனர். முடிவில் தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொள்வதெனவும்,விரைவில் திருமணம் செய்துகொள்வதென முடிவு செய்ததை தொடர்ந்து இருவரும் போலீஸ் முன்பு மாலை மாற்றிக்கொண்டனர்.