குறிச்சி : கோவை,
சுகுணாபுரத்திலுள்ள கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மற்றும் மத்திய
ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஜவுளித்துறை கமிட்டி சார்பில், கைத்தறி
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லூரி கருத்தரங்கு அறையில் நடந்த
நிகழ்ச்சியில், ஆடை வடிவமைப்புத்துறைத் தலைவர் யசோதா வரவேற்றார்.
ஜவுளித்துறை கமிட்டியின் துணை இயக்குனர் பெரியசாமி பேசியதாவது:
கைத்தறி
துறையில், பாதுகாப்பு மற்றும் புதிய வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், 43
லட்சம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்போர்
பயன்பெறுவர். நமது நாட்டில் விவசாயத்துக்கு அடுத்து, இத்துறையில்தான்
வேலைவாய்ப்பு அதிகளவு உள்ளது. நமது கலாசாரத்தை வெளிப்படுத்தவும் இத்துறை
உதவுகிறது.
தற்போது கைத்தறி நெசவில் பல்வேறு பணிகளும்,
இயந்திரந்திரங்களின் மூலம் மேற்கொள்ளும் வகையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. நேரம் மிச்சம், அதிக உற்பத்தி, கூடுதல் வருமானம்
போன்றவை இதன் மூலம் சாத்தியம் ஆகியுள்ளது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகம்,
நெசவாளர்களின் மேம்பாட்டுக்காக, பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம்
செய்துள்ளது.
நவீனமயமாக்கப்பட்ட கைத்தறி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு,
சந்தைப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்புக்கு ஆதரவளித்தல்,
விளம்பரப்படுத்துதல், ஏற்றுமதிக்கான வசதிகளை ஏற்படுத்துதல், கிளஸ்டர்
மேம்பாட்டு நிகழ்ச்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை இதில் அடங்கும்.
நெசவாளர்களுக்கு, நூல் வாங்கவும் உதவுவதால், சந்தையில் காணப்படும்
போட்டிகளை எதிர்கொள்வது எளிதாகும்.
மாணவர்களிடையே, கைத்தறி குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், புதிய டிசைன்களை அறிமுகப்படுத்துவது
எளிதாகும். ஜக்கார்டு மூலம், ஒரே நேரத்தில் பல்வேறு வண்ண நூல்களை
பயன்படுத்தி, துணி முழுவதும் டிசைன்களை உருவாக்கலாம். தொடர்ந்து, பல்வேறு
கல்லூரிகளிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
உதவி
இயக்குனர் சாமிநாதன் ராமி, முதன்மை தொழில்நுட்ப உதவியாளர் பாலச்சந்திரன்,
கல்லூரி செயலாளர் பழனியப்பன் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து, நவநாகரீக
உலகத்துக்கு கைத்தறி ஆடைகளின் தேவைகள், எனும் தலைப்பில் நடந்த
பேச்சுப்போட்டியில் வென்ற, நிவேதா, மெரின் மற்றும் அனுஜா ஆகியோருக்கு,
முறையே ரூ.1,500, 900 மற்றும் 600 மதிப்புள்ள கைத்தறி சேலை
பரிசளிக்கப்பட்டது.
ஜவுளித்துறை கமிட்டியின், தர உறுதி அலுவலர் சுப்பையா நன்றி கூறினார்.
