மாணவர்களிடம், எம்.பி.பி.எஸ்., படிப்பின் மீதான மோகம் குறைந்து வருகிறது. நடப்பாண்டு தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர், அந்த படிப்பை கைவிட்டு, இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள், பொதுத் தேர்வில் நல்ல மார்க் பெற்று, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.இ., படிப்புகளில் சேர்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர வேண்டும் என, அதிகளவில் மாணவர்கள் விரும்புகின்றனர். ஆனால், சில ஆண்டுகளாக, கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ்., படிப்பை தேர்வு செய்த மாணவர்கள், அந்த படிப்பில் சேராமல், மனதை மாற்றிக் கொண்டு விடுகின்றனர். பின்னர், அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, பி.இ., படிப்பை தேர்வு செய்கின்றனர்.
நடப்பாண்டிலும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர, மருத்துவ கவுன்சிலிங்கில் ஆணை பெற்ற, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், தற்போது அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் பி.இ., படிப்பை தேர்வு செய்து, அதில் சேர்ந்துவிட்டனர். கடந்த 17ம் தேதி, 41 மாணவர்கள், தாங்கள் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேர பெற்ற ஆணைகளை, இன்ஜினியரிங் கவுன்சிலிங் அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைத்தனர்.
இவ்வாறு சேர்ந்த மாணவி ஒருவர் கூறியதாவது: தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம், இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு விட்டது. இந்த கட்டணம் மூன்று லட்ச ரூபாய் வரை உள்ளது. இது என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட்டைத் தாண்டிய தொகை. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு பெறும் வங்கிக் கடனை திரும்பச் செலுத்துவதும் கடினம். காரணம், வெறும் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்துவிட்டு, பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது. மருத்துவத் துறையில் ஓரளவு சம்பாதிக்க, எம்.பி.பி.எஸ்., முடித்து, முதுகலை மருத்துவம் (எம்.எஸ்., எம்.டி.,) முடிக்க வேண்டும். அதே நேரம், பி.இ., படிப்பை முடித்ததும், வேலை கிடைக்க பல வாய்ப்புகள் உள்ளன. நன்றாகப் படித்தால், படிக்கும்போதே, கேம்பஸ் இன்டர்வியூவில், சர்வதேச நிறுவனங்களில் வேலை வாங்கி விட முடியும். இவ்வாறு அந்த மாணவி கூறினார்.
அதிகரிப்பு: அண்ணா பல்கலை கவுன்சிலிங் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு இதுபோல், 20 மாணவர்கள் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, டாட்டா காட்டிவிட்டு, பி.இ., படிப்பை தேர்வு செய்தனர். இந்த ஆண்டு, இப்போதே 40 பேர் பி.இ.,படிப்புக்கு வந்துள்ளனர். அவர்கள் கூறும் காரணங்களுடன் மேலும் சில விருப்பங்களும் உள்ளன. விரும்பிய மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்கின்றனர். பின்னர், அந்த கல்லூரியில் படிக்க ஆகும் செலவுகளை கணக்கிட்டு, முடிவை மாற்றிக் கொள்கின்றனர். இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் துவங்கி சில நாட்கள் தான் ஆகிறது. கட்-ஆப் குறைய, குறைய, எம்.பி.பி.எஸ்., படிப்பை விட்டுவிட்டு, பி.இ., படிப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

