தேடல்

சொல்கிறார்கள்

"கல்வி வளர்ச்சியை அதிகப்படுத்துவேன்!' முதல் முயற்சியிலேயே டெபுடி கலெக்டர் ஆகியுள்ள ஜனனி: சொந்த ஊர் பட்டுக்கோட்டை என்றாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சின்ன வயதில் இருந்தே, கலெக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதே போல், பிளஸ் 2விற்குப் பின், என் படிப்பை, ஐ.ஏ.எஸ்., கனவை நோக்கியதாகவே அமைத்துக் கொண்டேன். கல்லூரியில், பி.எஸ்.சி., மைக்ரோபயாலஜி படித்தேன். அறிவியல் தொடர்பான, அனைத்து விஷயங்களின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள, இது உதவியாக இருந்தது. அடுத்ததாக வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம். எனவே, எம்.எஸ்.சி., படிக்கும் யோசனையை விட்டு, ஷேர் புரோக்கிங் நிறுவனத்தில் சேர்ந்தேன். கூடவே, அஞ்சல் வழிக்கல்வி மூலம் பொது நிர்வாகம், படித்தேன். மற்ற மாநில மக்களுக்காக உழைப்பதைவிட, தமிழக மக்களுக்காக உழைப்பது சந்தோஷம் தருவதாக இருக்கும் என்பதால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பக்கம் திருப்பினேன். நான் முதல் முறை தேர்வு எழுதும் போதே, இது தான் கடைசி வாய்ப்பு என்று நினைத்து எழுதினேன். கடும் உழைப்பிற்குப் பலனாக, தமிழக அளவில், 11வது இடத்தைப் பிடித்து, டெபுடி கலெக்டர் பதவியையும் பெற்றுவிட்டேன். தமிழகம் முழுக்கப் பல ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் பெயர் சொல்லும் படி, சில, நூறு மட்டுமே உள்ளன. மற்ற குழுக்களுக்கு என்ன பிரச்னை, ஏன் அவர்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவ முயல்வேன். முக்கியமாக, நான் எந்த மாவட்டத்தில் பணியாற்றுகிறேனோ, அந்த மாவட்டத்தில் 1 சதவிகிதமாவது கல்வி வளர்ச்சியை அதிகப்படுத்துவேன்.