தேடல்

சத்துணவு பணியிடங்கள் நிரப்ப ரகசிய கூட்டம் : முற்றுகையில் சிக்கிய அமைச்சர்

சத்துணவுத் துறையில் அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து, ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத், சேலத்தில், எட்டு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்களுடன், ரகசிய ஆய்வுக் கூட்டம் நடத்தினார். தமிழகம் முழுவதும், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் உள்ளிட்ட 16 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடந்த 5ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தி.மு.க., ஆட்சியில், மொத்தமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன்பின் பரிந்துரை அடிப்படையில் பெரும்பாலான காலியிடம் நிரப்பப்பட்டது.

பதவிக்கு பணம்... : தற்போதைய ஆட்சியில், இன சுழற்சி அடிப்படையில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., விதவையர் உள்ளிட்டவற்றின்படி காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஆளும்கட்சியினர் மூலமே, பணியிடம் நிரப்பப்படுவதால், அக்கட்சியின் ஒன்றிய, நகர செயலர்களிடம் பணத்தை கொடுத்து, பணியிடத்தை பெறுவதற்கு, பெண்கள் பலர் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக ஊரக தொழில் துறை மற்றும் சத்துணவு அமைச்சர் சம்பத், நேற்று சேலம் வந்தார். ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவருடன், ஆலோசனை நடத்த, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஓட்டலில் ஆலோசனை: நேற்று மாலை, 5.30 மணியளவில், அவர் தங்கியிருந்தஓட்டலில், சத்துணவு பணியிடம் நிரப்புவது குறித்த, ரகசிய கூட்டம் நடந்தது. அதில், சத்துணவு திட்டத்துக்கு ஒதுக்கப்படும் பொருட்கள், சரியான முறையில், மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட வேண்டும். நோய் தாக்கும் வகையிலான காய்கறி, முட்டை உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாது என, எச்சரிக்கை விடுத்தார். காலிப்பணியிட விவரம் குறித்த தகவலையும், மாவட்ட வாரியாக கேட்டறிந்ததோடு, அது நிரப்புவது தொடர்பான அறிவுரைகளையும் வழங்கினார். தொடர்ந்து, அ.தி.மு.க.,வினர் பலர், சத்துணவு பணிக்கு வாய்ப்பு வழங்கும்படி, பெண்களை அழைத்து வந்து, அமைச்சரை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.