தேடல்

தோட்டக்கலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

தேனி:மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தகுதியுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்திற்கு 2 கோடியே 19 லட்சம் ரூபாய், தேசிய நுண்ணீர் பாசன இயக்க திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப காய்கறி பெருக்கு திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய், துல்லிய பண்ணைய திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்காயம், வெற்றிலை உயர் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மானாவாரி தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் 75 லட்சம் ரூபாய், பந்தல் காய்கறி அபிவிருத்தி திட்டத்தில் 62 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு வழங்கி உள்ளது. இந்த ஒதுக்கீடு பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பின்னர், தேவைப்பட்டால் கூடுதல் ஒதுக்கீடு பெற்றுக் கொள்ள முடியும்.எனவே தகுதி உள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம், இவ்வாறு கூறினார்.