நடிகர் சைப் அலிகான் கைதாகி விடுதலை!

மும்பையில் வெளிநாட்டு அதிகாரியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட நடிகர் சைப் அலீகான், பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மும்பை ஜுகு பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் சர்மா. இவர் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் துணை இயக்குனராக உள்ளார். சம்பவத்தன்று இரவு இக்பால், மும்பை கொலாபா தாஜ் ஓட்டலில் உள்ள வாசாபி உணவகத்துக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கு அனைவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

அவர்களுக்கு அடுத்த மேஜையில் பிரபல இந்தி நடிகர் சைப் அலிகான், நடிகைகள் கரீனா கபூர், கரீஷ்மா, மலைக்கா அரோரா கான், அம்ரிதா அரோரா மற்றும் சில நண்பர்கள் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் சத்தம் போட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு இக்பால் சர்மா எதிர்ப்பு தெரிவித்தார். சத்தமாக பேசாதீர்கள்; எங்களுக்கு இடையூறாக இருக்கிறது, என்று சைப்பிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது.

நடிகர் சைப் அலிகானும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இக்பால் சர்மாவையும், அவருடைய மாமனாரையும் தாக்கினர். இக்பால் சர்மாவுக்கு மூக்கு எலும்பில் முறிவு ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் பற்றி கொலாபா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் இக்பால் சர்மா. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சைப் அலிகான் தன்னுடைய வக்கீல்களுடன் கொலாபா போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ரூ.15 ஆயிரம் ரொக்க ஜாமீனில் உடனே விடுவிக்கப்பட்டார்.