நெல்லை: கார்-லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி

திருநெல்வேலி: நெல்லை அருகே இன்டிகா கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் சித்தா டாக்டர் கோபிநாத். இவரது மனைவிக்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக உறவினர்கள் வந்திருந்தனர். கோபிநாத்தின் சகோதரி ஜெயக்குமாரி தமது கணவர் காளிமுத்துவுடன் சிவகிரியில் வசித்து வருகிறார். குற்றாலம், மேலகரத்தை சேர்ந்தவர் அம்மையப்பன் 50. ரிலையன்ஸ் வின்ட்மில் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இரு குடும்பத்தினரும் ஒரு வாடகை காரில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு நெல்லை வந்தனர். இன்று பிற்பகல் குற்றாலம் கிளம்பினர். காரில் 8 பேர் சென்றனர். நெல்லை-தென்காசி சாலையில் ஆலங்குளத்திற்கு முன்னதாக சென்றுகொண்டிருந்தபோது எதிரே மாலை 4 மணியளவில் தென்காசியில் இருந்து வேகமாக வந்த ஐசர் லாரி, இன்டிகா கார் மீது மோதியது. இதில் கார் உருத்தெரியாமல் அப்பளமாக நொறுங்கியது. காரில் பயணித்த மேலகரம் அம்மையப்பன் 50, அம்மையப்பன் மகள் செல்வி 20, அம்மையப்பன் மகன் கவுதம் 9, சிவகிரி, காளிமுத்துவின் மனைவி ஜெயக்குமாரி 37, மகள் காயத்திரி 13, இலத்தூரை அடுத்த சீவநல்லூரை சேர்ந்த பெண் ஆறுமுக களஞ்சியம் 35, தென்காசியை சேர்ந்த வாடகை கார் டிரைவர் பாலா 32 ஆகியோர் பலியாயினர். இதில் லேசான காயங்களுடன் சிகிச்சைக்கு செல்லும் வழியில் காளிமுத்துவின் மகன் ஹரீஷ் 8, பலியானான். சிவகிரியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் காளிமுத்து பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரே நபர் இவர்தான். சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் களக்காடு, புத்தேரியை சேர்ந்த வேல்முருகனும் 34, காயமுற்றார்.