மதுரை : மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா, கொடைக்கானல் பயணத்தை முடித்துக்
கொண்டு, இன்று (ஜூலை 23) அமர்நாத் யாத்திரை செல்கிறார். இருபது நாட்களுக்கு
பின் மதுரை திரும்புவார்.பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் ஏற்பட்ட
பிரச்னையால், சிறை சென்று, மதுரை ஆதீன மடத்திற்கு திரும்பிய நித்யானந்தா,
ஜூலை 1ல் கொடைக்கானல் சென்றார். அங்கு தினமும் பக்தர்களுக்கு சொற்பொழிவு,
மூச்சுப் பயிற்சி அளித்தார். மூத்த ஆதீனம் அருணகிரியும் கொடைக்கானல் சென்று
பயிற்சி பெற்றார்.இந்நிலையில், மாஜி பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த
பாலியல் புகார் தொடர்பாக, கர்நாடக கோர்ட்டில் ஜூலை 30ல் ஆஜராகும்படி,
நித்யானந்தாவுக்கு அம்மாநில சி.பி.சி.ஐ.டி.,போலீசார், நேற்று முன் தினம்
மதுரை ஆதீன மடத்தில் சம்மன் வழங்கினர். இதற்கிடையே, நேற்று மாலை 5.30
மணிக்கு, ஆதீன மடத்திற்கு நித்யானந்தா திரும்பினார். இன்று மதியம் 1.30
மணிக்கு மேல், அமர்நாத் யாத்திரைக்கு செல்லவிருப்பதாக சீடர்கள்
தெரிவித்தனர். ஜூலை 30ல், கர்நாடக கோர்ட்டில் ஆஜராக சம்மன்
கொடுக்கப்பட்டுள்ளதே என கேட்டதற்கு, வக்கீல் மூலம் அதை பார்த்துக்
கொள்வோம் என்றனர்.
