தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி * கடைசி பந்து வரை டென்ஷன்

ஆக்லாந்து: பரபரப்பான மூன்றாவது டுவென்டி-20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று டுவென்டி-20 போட்டிகளில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருந்த நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி நேற்று ஆக்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
லெவி ஏமாற்றம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. கடந்த போட்டியில் அதிவேக சதம் அடித்த ரிச்சர்ட் லெவி இம்முறை 11 ரன்களுக்கு வெளியேறினார். பின் ஆம்லா(33), கேப்டன் டிவிலியர்ஸ்(29), டுமினி(38), பார்னல்(22) கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு நிகோல்(33), கப்டில்(26) இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். கேப்டன் பிரண்டன் மெக்கலம்(18) ஓரளவுக்கு கைகொடுத்தார். ஒருகட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 156 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது. கடைசி இரு ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தான் தேவைப்பட்டன. இந்த நேரத்தில் போத்தா சுழலில், அரைசதம் கடந்த ஜெசி ரைடர்(52), வெளியேற, நிலைமை தலைகீழாக மாறியது.
பிரி-ஹிட் வீண்:
கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. டி லாங்கே பந்துவீசினார். முதல் பந்தில் பிராங்க்ளின் ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் நாதன் மெக்கலம்(0) அவுட்டானார். 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் பிரேஸ்வல்(0) அவுட்டானார். 6வது பந்தில் ஒரு சிக்சர் தேவைப்பட்டது. இம்முறை டி லாங்கே நோ-பால் வீச, உதிரி சேர்த்து 2 ரன்கள் கிடைத்தன. தவிர, பிரி-ஹிட் வாய்ப்பும் கிடைக்க, டென்ஷன் எகிறியது. மீண்டும் வீசப்பட்ட இந்த பந்தில் சவுத்தி பவுண்டரி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு ரன் கூட எடுக்கத் தவற, தென் ஆப்ரிக்கா பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
மூன்று ரன்களில் திரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி தொடரை 2-1 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருதை போத்தா வென்றார்.