பிக்-அப் ஜீப்பின் பின் பகுதி சரிந்ததில் 26 பேர் படுகாயம்

மஞ்சூர் :மஞ்சூர்-ஊட்டி ரோட்டில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த பிக்-அப் ஜீப்பின் பின் பகுதி கழன்று விழுந்ததில் 26 பேர் படுகாயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கன்னேரி கிராமத்தை சேர்ந்த 15 பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் ஒரு பிக்-அப் ஜீப்பில் கீழ்குந்தா கிராமத்தில் நடந்த இறப்பு சடங்குக்கு சென்றனர். குந்தா பாலம் சிவன் கோவில் அருகே ஒரு வளைவில் வாகனம் திரும்பும் போது பின் பக்கம் கழன்று தூக்கி வீசப்பட்டது. தடுமாறிய பிக்அப்வேன் 150 அடி தூரம் வரை ஓடி நின்றது. வாகனத்தில் இருந்தவர்கள் பல மீட்டருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்தனர்.
அவ்வழியே வந்த வாகனத்தில் காயமடைந்தவர்கள் மஞ்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 15 பெண்கள் உட்பட 26 பேர் படு காயமடைந்தனர். சுமதி(40), சிவகாமி(29) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்விபத்து குறித்து மஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.