பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னையால் சினிமா சூட்டிங் முடக்கம்! கோலிவுட்டிற்கு ரூ.100 கோடி நஷ்டம்...!

ஒரு மாத காலமாக நீடித்து வரும் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னையால், கோலிவுட்டிற்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி நஷ்டமாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு பெப்சி தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டுக்கான சம்பளம் இன்னும் உயர்த்தப்படவில்லை. இதுதொடர்பாக பெப்சி சங்கத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்த பிரச்னையால் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கோலிவுட் சினிமாவே முடங்கி போய் உள்ளது.

இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சுமூக முடிவு ‌எடுக்க பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தொடர்ந்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இன்னும் ஒரு சுமூக முடிவு எட்டப்படவில்‌லை. நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும்-பெப்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட உடன்பாடு ஏற்பாட்டுவிட்டுதாகவும், இன்னும் ஓரிரு நாளில் இப்பிரச்னை தீர்ந்து விடும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், பெப்சி பொதுச் செயலாளர் சிவா மற்றும் டைரக்டர் அமீர் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதனிடையே‌ இப்பிரச்னையால் 100க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள், கடந்த ஒரு மாத காலமாக நடக்காமல் முடங்கிபோய் உள்ளது. இதனால் தமிழ் சினிமா துறைக்கு ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் மத்திய அரசின் ‌சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா முழுக்க உள்ள அனைத்து தியேட்டர்களும் இன்று ஒருநாள் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல மாநில சினிமா துறையினரும் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்துள்ளனர்.