தேடல்

உ.பி.யில் மகன் நடத்தும் ஆட்சியில் அப்பாவுக்கு திருப்தியில்லையாம்!

லக்னோ : உ.பி.யில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட 6 மாதம் ஆக போகிறது. ஆனால் இன்னும் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்றுதனது மகனும், முதல்வருமான அகிலேஷ் மீது அதிருப்தியில் இருக்கிறார் முலாயம் சிங்.

உ.பி.யில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கட்சியின் தலைவர் முலாயம் சிங், தனது மகன் அகிலேஷை முதல்வராக நியமித்தார். அகிலேஷூம் ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்து, 6வது மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் முலாயம் சிங், தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். முதல்வர் அகிலேஷின் இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் அகிலேஷ் உட்பட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

மகன் மீது அதிருப்தி: அப்போது கட்சியினருடன் பேசிய முலாயம் சிங், கட்சி‌ எம்.எல்.ஏ.க்களை எச்சரித்துள்ளார். ஆட்சி பொறுப்பேற்று 6 மாத காலம் ஆக போகிறது, ஆனால் இதுவரை எந்த ஒரு காரியமும் உருப்படியாக செய்யவில்லை. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளும் அப்படியே கிடக்கிறது. உடனடியாக அனைவரும் விரைந்து செயல்பட்டு ‌கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும் மாநிலத்தில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கிறது. அதற்குள் அரசு விரைந்து செயல்பட்டு மக்களுக்கு தே‌வையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். அரசுக்கு ‌கெட்ட பெயர் எடுத்து கொடுக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். முலாயம் சிங்கின் இந்த பேச்சு மாநிலத்தில் முதல்வராக இருக்கும் தனது மகன் அகிலேஷ், சரியாக ஆட்சி நடத்தவில்லை என்பதையும், அவர் மீதான அதிருப்தியையுமே காட்டுகிறது.

இதனிடையே முலாயம் சிங்கின் கருத்துக்கு பதிலளித்து இருக்கும் அகிலேஷ், கட்சியின் தலைவர் அவர். அவர் என்ன சொன்னாரோ அதன்படி, நாங்கள் நடப்போம் என்று கூறியுள்ளார்.