தேடல்

பெற்றோர் - ஆசிரியர் கழக பதவியை விரும்பும் அரசியல்வாதிகள்

திருவள்ளூர்:பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் உறுப்பினராக, பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரே வரவேண்டும் என்ற, விதிமுறையை மீறி, இந்த பதவியை அரசியல்வாதிகள் வகிக்கின்றனர். இதனால், பெற்றோர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
கோட்பாடு
இக்கழகத்திற்கு வரையறுக்கப்பட்ட, 31 கோட்பாடுகளில் சில:
? மத்திய, மாநில அரசுகளின் கல்வி கொள்கைகளை மனதில் கொண்டு, பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துதல்.
? பள்ளிக்கும், சமுதாயத்திற்கும் சமூக உறவை ஏற்படுத்தும் தொடர்பு அமைப்பாக இருந்து பெற்றோரின் கருத்துக்கள், நோக்கங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறுதல்.
? மாணவர்களின் முழு வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவும் வகையில், பள்ளிச் சீரமைப்பு நிகழ்ச்சிகள், பள்ளி இணைப்புத் திட்டங்களை திட்டமிட்டு, ஏற்பாடு செய்து நடத்துதல்.
? பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான பள்ளி, நூலக, அறிவியல் ஆய்வக கட்டடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளை திட்டமிடுதல், கையகப்படுத்துதல், விலைக்கு வாங்குதல், கட்டி முடித்தல், பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் செய்து, பொறுப்பு மேற்கொள்ளல்.
? கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர்களை கல்வித் தகுதி, கழக நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணியமர்த்தி தொகுப்பு ஊதியம் அளித்தல்.
இக்குழுவில், தலைவர், துணைத் தலைவர், செயலர், இணைச் செயலர், நான்கு உறுப்பினர்கள் ஆகியோர், பெற்றோர் தரப்பில் இருந்தும் தேர்வு செய்யப்படுவர். இதன்படி, பெற்றோர் தரப்பில் பொறுப்புக்கு வர, அவர்களது குழந்தைகள் பள்ளியில் பயில வேண்டும். அல்லது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் காப்பாளராக இருக்க வேண்டும்.
விதி மீறல்
தற்போது, பெரும்பாலான பள்ளிகளில், இந்த விதிகளை மீறி நிர்வாகிகள் உள்ளனர். தங்களதுகுழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டு, பள்ளியில் பயிலும் யாராவது ஒரு மாணவரின் காப்பாளர் பெயரில் பதவியை வகிக்கின்றனர்.
ஒரு சில, ஊராட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கினை பயன்படுத்தி, இப்பதவிக்கு வருகின்றனர். சில பள்ளிகளில் தங்களது குழந்தைகள் பள்ளி பருவத்தை கடந்தும், இன்றும் தலைவராக நீடிக்கின்றனர்.
இதனால், அவர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழக கோட்பாடுகளுக்கு உட்பட்டு பள்ளியையும், மாணவர்களின் படிப்பு திறனையும் மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால், பெற்றோர் கடும் அதிருப்தியடைந்து உள்ளனர்.