போலீஸ் ஸ்டேசன் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்

லேட்ஹர் : ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசன் மீது மாவோயிஸ்ட்டுகள் அதிரடி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 01.30 மணியளவில் லேட்ஹர் பகுதிக்கு வந்த மாவோயிஸ்டுகள், பாலுமத் போலீஸ் ஸ்டேசன் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், போலீஸ் ஸ்டேசன் அருகே தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீஸ் ஸ்டேசன் மீது தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், பஞ்சாயத்து உறுப்பினர் ராஜேந்திர சாஹூவின் வீட்டையும் மாவோயிஸ்டுகள் தரைமட்டமாக்கினர். அதிர்ஷ்டவசமாக, தாக்குதல் நடந்தபோது அவ்வீட்டில் யாரும் இல்லை. அப்பகுதி மக்கள், இதனை கண்டித்து தேசிய நெடுஞ்சாலை 99ல் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.