சென்னை : சென்னை
மாவட்டத்தில், இரு கட்டங்களாக நடக்கும் பிளஸ் 2 செய்முறை தேர்வில், 30
ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்பர் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,
ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிவிப்பு: பிளஸ் 2
செய்முறை தேர்வு, அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளிலும், இரு கட்டங்களாக
நடக்கின்றன. முதல் கட்ட தேர்வுகள், பிப்.,1 முதல், 8ம் தேதி வரையிலும்,
இரண்டாம் கட்ட தேர்வுகள், பிப்.,9 முதல், 16 வரையிலும் நடக்கும். மாவட்டத்தில், 406 பள்ளிகளில் இருந்து, 30 ஆயிரத்து 13 மாணவ, மாணவியர், செய்முறை தேர்வில் பங்கேற்பர். 300 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பிரதான பொது தேர்வை, 51 ஆயிரத்து 604 பேர் எழுதுகின்றனர்.செய்முறை
தேர்வில், 1,400 முதுகலை ஆசிரியர் ஈடுபடுத்தப்படுவர். முதன்மை கல்வி
அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், ஆங்கிலோ
இந்தியன் பள்ளி ஆய்வாளர் ஆகியோர், தேர்வு மையங்களை பார்வையிடுவர். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
