வேளச்சேரி:வேளச்சேரியில்,
பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக, வீடுகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது.
இதனால், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றன. இதற்கு, சென்னை
கழிவுநீர் அகற்று வாரியம், நிரந்தர தீர்வு காண வேண்டும்.வேளச்சேரி, 100
அடி சாலையை ஒட்டியுள்ளது, செல்லியம்மன் நகர். அங்கு, 50க்கும் மேற்பட்ட
குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, அப்பகுதியில் உள்ள பாதாள
சாக்கடையில், அடிக்கடி அடைப்புஏற்படுகிறது.
கடும் துர்நாற்றம்
இது
குறித்து, அங்கு வசிப்போர், பல முறை புகார் தெரிவித்தும், சென்னை கழிவுநீர்
அகற்று வாரிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.
கடந்த
சில நாட்களாக, பாதாள சாக்கடையில் மீண்டும் ஏற்பட்ட அடைப்பு காரணமாக,
கழிவுநீர் செல்ல வழியின்றி, கழிவறைகள் மூலம், வீடுகளில் புகுந்து, பெரும்
பாதிப்பைஏற்படுத்தி உள்ளது.அங்குள்ள பல வீடுகளில், கழிவுநீர் தேங்கி
உள்ளது. இதனால், அந்நகர் முழுவதும், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார
சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, செல்லியம்மன் நகரில் வசிப்போர்
கூறியதாவது:கடந்தநான்கு ஆண்டுகளாக, பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னை
உள்ளது. குறிப்பாக, 100 அடி சாலையில் கட்டப்பபட்ட தனியார் உணவகத்திற்கு,
கமர்ஷியல் ரீதியான இணைப்பு கொடுக்காமல், குடியிருப்பு பகுதிகளுக்கு வரும்
பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுத்ததால் தான் இப்பிரச்னை
ஏற்படுகிறது.மருத்துவ பரிசோதனை?சென்னை கழிவுநீர் அகற்று
வாரியத்தில்,நாங்கள் பல முறை புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த தனியார்
உணவகம், கமர்ஷியல் இணைப்பு சமீபத்தில் பெற்றாலும், இணைப்பு இன்றளவில்
மாற்றப்படவில்லை.
இதனால், கடந்த சில நாட்களாக, பாதாள சாக்கடையில் கடும்
அடைப்பு ஏற்பட்டு, சாலை முழுவதும் கழிவுநீர் வழிந்தது. நேற்று முதல்,
வீடுகளில் உள்ள கழிவறை மூலம், அறைகளுக்குள்ளும் கழிவு நீர்
புகுந்துவிட்டது.இதனால், குழந்தைகள், முதியோர் மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட சென்னை கழிவுநீர் அகற்று வாரிய
அதிகாரிகள், பாதாள சாக்கடை அடைப்புக்கு, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை
எடுக்க வேண்டும்.மேலும், இப்பகுதி மக்களுக்கு உடனடியாக மருத்துவ
பரிசோதனையும் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
