தேடல்

மக்களவை தலைவராக ராகுல் : எம்.பி.க்கள் விருப்பம்

புதுடில்லி : லோக்சபா தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி எம்.பி,க்கள் 10 பேர், கட்சி தலைவர் சோனியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல், விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், உயர்பதவியை வகித்த தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், எம்.பிக்கள், சோனியாவுக்கு அனுப்பியுள்ள கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒடி்சா எம்.பி. பக்தா சரண் தாஸ் உள்ளிட்ட 9 லோக்சபா எம்.பி,க்கள் கூட்டாக, கட்சி தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடித்ததி்ல் குறிப்பிட்டுள்ளதாவது, கட்சிக்கு தற்போது பார்லிமென்டிலும், அதற்கு வெளியிலும் நல்ல பெயர் இல்‌லை என்றும், இந்த அவப்பெய‌ரை, ராகுல் ஒருவரால் மட்டுமே துடைக்க இயலும். ராகுலை, ‌லோக்சபா தலைவராக நியமிப்பதற்கு இதுவே தக்க தருணம். பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் அனைத்து விசயங்களையும் ராகுல் திறம்பட கையாண்டு அதில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளது. பார்லிமென்ட் எம்.பி.க்களுக்கு அவர் சிறந்த வழிகாட்டியாக அமைவார்.

பார்லிமென்டில், லோக்சபா தலைவராக ராகுலின் செயல்பாடு கட்சிக்கு புது உத்வேகத்தை அளிக்கும். நாட்டில் மற்றும் கட்சியில் பல மூத்த தலைவர்கள் உள்ள நிலையில், 50 சதவீதத்திற்கு மேற்பட்ட இளந்தலைமுறையினர், தாங்கள் சார்ந்த இளைய சமுதாயத்தை சேர்ந்தவரே, நாட்டின் உயர்பொறுப்புகளில் வர வேண்டும் என்பதை விரும்புகின்றனர்.இத்தருணத்தில், ராகுல், தன்னிகரற்ற தலைவராக கட்சிப்பணியாற்றி வருகிறார். இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது அவர் அனை‌வரையும் கவரும் விதத்தில் செயல்பட்டு வருகிறார். எனவே, அவரை லோக்சபா தலைவராக நியமித்தால், கட்சிக்கும் நற்பெயர் கிடைக்கும் என்று அவர்கள் அதில் ‌குறிப்பிட்டுள்ளனர்.

லோக்சபா தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த இடம் தற்‌போது காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.