மாட்டுவண்டியில் மணல் கடத்தினால் கடும் நடவடிக்கை

சாத்தான்குளம் : மாட்டுவண்டிகளில் மணல் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.,பொற்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் மணல் திருட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விடுதலைச் சிறுத்தை பிரமுகர் ஒருவர் மணல் அள்ளும் தகராறில் கொலை செய்யப்பட்டார். எனவே மணல் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஆர்.டி.ஓ.,உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.,பொற்கொடி, சாத்தான்குளம் தாசில்தார் சங்கரநாராயணன், ஆர்.ஐ.கோபாலகிருஷ்ணன், வி.ஏ.ஓ.,மணிகண்டன் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் அனுமதி இன்றி மணலுடன் வந்த இரண்டு டிப்பர் லாரி மற்றும் மாட்டுவண்டி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி திருச்செந்தூர் ஆர்.டி.ஒ.,பொற்கொடி கூறும்பொழுது அரசு பல முறை எச்சரித்தும் அதை மீறி மணல் திருட்டு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறினார். சமீபத்தில் உடன்குடி அருகே கருமேனி ஆற்றில் மாட்டுவண்டி மூலம் அனுமதி இன்றி மணல் அள்ளிய விடுதலைச் சிறுத்தைப் பிரமுகர் அடித்துக் கொல்லப்பட்டார். எனவே மாவட்ட நிர்வாகம் மாட்டுவண்டி மூலம் மணல் அள்ளுபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.