மத்திய கூட்டணி அரசுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சரத் பவார் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மம்தாவும் அடுத்த குண்டை வீசியுள்ளார். எங்களுக்கு மரியாதை கிடைக்கும் வரை தான், ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகிப்போம், என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மம்தாவும், பவாரும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க., தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்ற போதிலும், பதவி சுகத் துக்காக, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஜால்ரா அடித்து வருகிறது. மத்திய அமைச்சரவையில், தனக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்படாததை எதிர்த்து, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மேலிடத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரும், அவரது கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேலும், மத்திய அமைச்சர் பொறுப்புகளில் இருந்து, விலகவும் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, தங்களது அமைச்சரவை பணிகளைக் கவனிக்காமல், காங்., மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். சரத் பவாரின் இந்த அதிரடி அரசியலில், மத்திய அரசு ஆடிப் போயுள்ளது. அடுத்த அடி: சரத் பவார் கொடுத்த அடியில் இருந்து மீள்வதற்குள், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தாவிடமிருந்து, காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசுக்கு, அடுத்த அடி விழுந்துள்ளது. கோல்கட்டாவில், திரிணமுல் காங்கிரஸ் சார்பில் தியாகிகள் தினம், நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில், மம்தா பானர்ஜி, தனக்கு போக்கு காட்டி வரும் மத்திய அரசை குறி வைத்து, அனல் கக்கும் வார்த்தைகளால், சரமாரியாக தாக்குதல் நடத்தினார். அவர் பேசியதாவது: யாருடைய தயவின் பேரிலும் நாங்கள் அரசியல் நடத்த விரும்பவில்லை. யாருடைய தயவும் எங்களுக்கு தேவை யில்லை. எங்களுக்கு மரியாதை கிடைக்கும் வரை, மத்திய அரசில் அங்கம் வகிப்போம். அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் எங்களுக்கு காங்கிரசின் தயவு தேவையில்லை. இங்கு, தனியாகவே அரசியல் நடத்துவது என, முடிவு செய்துள்ளோம். மத்திய அரசு அளித்த கடன்களுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில், மூன்றாண்டு கால அவகாசம் கேட்டுள்ளோம். எங்களின் இந்த கோரிக்கைக்கு, மத்திய அரசு என்ன பதிலளிக்கிறது என்பதற்காகக்
காத்திருக்கிறோம்.
டில்லிக்கு...: முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு, பெருமளவு கடன் வாங்கி, மாநில அரசுக்கு பெரும் சுமையை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இதற்கு, பிரதமர் எப்படி அனுமதி அளித்தார். தேவைப்பட்டால், எங்களின் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, எங்கள் கட்சியின் அனைத்து எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன், டில்லி நோக்கிச் செல்லவும் தயாராக இருக்கிறோம். மத்திய அரசிடம், நாங்கள் இரவலோ, சிறப்பு நிதியோ கேட்கவில்லை. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், எங்களைப் பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். இதை, அவர்கள் நிறுத்த வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார். மம்தாவின் இந்த தடாலடியான பேச்சு, காங் கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள பதவிக் காலத்தை, சுமுகமாக கழிப்பது எப்படி என, காங்., தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜால்ரா: ஐ.மு., கூட்டணியில் உள்ள, சரத் பவாரும், மம்தாவும், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு முக்கிய கட்சியான தி.மு.க.,வோ கொஞ்சம் கூட ரோஷமே இல்லாமல் காங்கிரசுக்கும், அதன் தலைவர்களுக்கும் தொடர்ந்து ஜால்ரா அடித்து வருகிறது. இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது, மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் வகையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வர் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அதிரடியாக அறிவித்து விட்டு,ராஜினாமா கடிதங்களை தானே பெற்றார். இவரது மிரட்டலுக்கு மத்திய அரசு பணியாத நிலையில், ராஜினாமா முடிவை கைவிட்டார். இது தவிர, இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, முல்லை பெரியாறு விவகாரம், காவிரியில் தண்ணீர் தராமல் கர்நாடகா மிரட்டல் போன்ற தமிழக நலன் சார்ந்த விஷயங்களிலும், பெட்ரோல் விலை உயர்வு குறித்த விஷயத்திலும், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதைத் தவிர்த்து, வெறும் கடிதங்களை மட்டுமே, தி.மு.க., தலைவர் எழுதி வரு கிறார். சமீபத்தில் கூட, மத்திய அரசுக்கு பயந்து, டெசோ மாநாட்டில், தனி ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்ற உத்தேசமில்லை என, தி.மு.க., பல்டி அடித்தது . மற்ற கூட்டணி கட்சிகள் எல்லாம், காங்கிர சையும், மத்திய அரசையும் மிரட்டி வரும் நிலையில், தி.மு.க.,வின் இந்த அமைதியான போக்கை, வட மாநில அனைத்து கட்சித் தலைவர்கள் கிண்டலுடன் விமர்சித்து வருகின்றனர்.
- நமது சிறப்புநிருபர் -

