பள்ளிபாளையம்: கரட்டாங்காடு ரேஷன் கடையில், தேவையான அளவுக்கு அத்தியாவசிய
பொருட்கள் சப்ளை செய்யாததால், கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
தேவையான அளவு சப்ளை செய்ய, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட
கரட்டாங்காட்டில், ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, 500க்கும்
மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு அரசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு,
உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்
வழங்கப்படுகிறது.
இக்கடையில், ரேஷன் கார்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்
வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. பொருட்களை வாங்குவதற்காக காலை
முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தும், பொருள் கிடைக்காததால்,
ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
இது குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டால், தேவைக்கு குறைவாகவே பொட்கள்
சப்ளை செய்கின்றனர். அதனால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது, என,
தட்டிக்கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். முன்னாள் வருபவர்களுகே மீண்டும்
மீண்டும் பொருட்கள் வழங்குவதால், பின்னால் வருபவர்கள் சர்க்கரை,
மண்ணெண்ணெய் வாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சில மாதங்களாக
டோக்கன் கொடுத்து பொருட்களை வழங்கி வருகின்றனர். அதையும் முறையாக
வழங்காததால், அப்பாவி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ரேஷன் கடையில்
பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள்
வேலைக்கு செல்லாமல் வந்து காத்திருக்கும் நிலைக்கு
தள்ளப்படுகின்றனர்.அப்படி காத்திருந்தும், பொருட்கள் கிடைக்காததால்,
ஏமாற்றத்தில் கிராம மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். கரட்டாங்காடு ரேஷன்
கடையில், அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில், தேவையான
அளவுக்கு பொருட்களை அனுப்ப, மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
