தேடல்

ரூ.18 கோடியில் அணைக்கட்டு, பாசன வாய்க்கால்கள்...

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 18 கோடி ரூபாய் உலக வங்கி நிதியுதவியுடன் கோமுகி நதி உபவடி நில பகுதி அணைக்கட்டுகள், பாசன வரத்து வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் கடைகோடி பகுதியாக கள்ளக்குறிச்சி உள்ளது. கிராமங்களையே முழுமையாக உள்ளடக்கிய இப்பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் ஏரி, அணைக்கட்டு பாசனத்தையே அதிகம் நம்பி இருக்கின்ற நிலை உள்ளது. இந்நிலையில் பாசன வாய்க்கால்கள், வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பின்றிதூர்ந்து நாளடைவில் காணாமல் போய்விடுவதால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையை மாற்றிட பாசன வாய்க்கால், அணைக்கட்டுகளை புனரமைக்கும் கள்ளக்குறிச்சி கோமுகி உப வடிநிலப்பகுதி வெள்ளாறு கோட்ட திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டது.உலக வங்கி நிதி உதவியுடன் இத்திட்டத்தை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் விவசாயம் சார்ந்த துறைகளான பொதுப்பணித்துறை, வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைத்துறை, வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்கம், வேளாண் பல்கலைக் கழகம், வேளாண் பொறியியல் துறை, மீன்வளத்துறை ஆகிய எட்டு துறைகளை அரசு ஒருங்கிணைத்து விவசாயிகளின் எண்ணப்படி பாசனத்தை உறுதி செய்துள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்த 68 கிராமங்களில் பாசன விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளே தங்களுக்கு வேண்டிய ஆயக்கட்டு பாசனத்தை உறுதி செய்வதற்காக திட்டங்களை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைந்த அரசு துறை அதிகாரிகள் குழுவினரிடம் சமர்ப்பித்தனர். இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் 68 கிராமங்களில் 5,000 ஏக்கர் விளை நிலங் கள் பாசனம் பெறும் வகையில் ஏரி, வரத்து வாய்க்கால், மதகுகள், அணைக்கட்டு பராமரிக்கஉலக வங்கி நிதியுதவியுடன் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது டெண்டர் விடப்பட்டு கோமுகி நதி உபவடி நில விவசாய அபிவிருத்தி திட்ட பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.இத்திட்டத்தில் 42 அணைக்கட்டுகள் புனரமைப்பு, 80 கி. மீட்டர் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்பணிகளை உலக வங்கிநிபுணர் குழுவினர், எட்டு துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்து துரிதப்படுத்தி வருகின்றனர்.மகத்தான ஆயக்கட்டு பாசனத்தை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.