லண்டன் கனவு

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள ரஷ்ய வீராங்கனை ஷரபோவா, இம்முறை லண்டன் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டு, பதக்கம் வெல்ல காத்திருக்கிறார்.
டென்னிஸ் அரங்கில் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா, 24. இதுவரை 24 சர்வதேச டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ள இவர், விம்பிள்டன் (2004), யு.எஸ்., ஓபன் (2006) மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் (2008), என மூன்று கிராண்ட்ஸ்லாம் கோப்பை கைப்பற்றினார்.
ஆனால், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவு மட்டும் இன்னும் நிறைவேறவில்லை. கடந்த 2008, பீஜிங் ஒலிம்பிக்கின் போது தோள்பட்டை காயத்தால், பங்கேற்க முடியாமல் விலகினார். கடந்த ஆண்டு செப்டம்பரில், டோக்கியோவில் நடந்த பான் பசிபிக் தொடரில் கணுக்காலில் காயமடைந்து விலகினார்.
இதிலிருந்து மீண்ட இவர், இம்முறை ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வெல்லும் உறுதியில் இருந்தார். இதற்கேற்ப, பைனலுக்கு முன்னேறிய இவர், துரதிருஷ்டவசமாக பெலாரசின் அசரன்காவிடம் கோப்பையை பறிகொடுத்தார். இந்நிலையில் எதிர்வரும் லண்டன் ஒலிம்பிக் குறித்து ஷரபோவா கூறியது:
பொதுவாக விம்பிள்டன் போட்டியை வெல்வது என்பது ஒவ்வொரு ஆண்டும் பெரிய லட்சியமாக இருக்கும். இத்தொடர் முடிந்த இரு வாரத்துக்குப் பின் லண்டன் ஒலிம்பிக் துவங்குகிறது. இந்த இரண்டிலும் பங்கேற்க வேண்டும் என்று குழந்தையாக இருந்த போதே நினைத்த வந்தேன்.
ரஷ்யாவில் விளையாட்டு வீரராக இருப்பவர் ஒவ்வொருவருக்கும் இது பெரிய கனவு, லட்சியமாக இருக்கும். ஏனெனில் ஒலிம்பிக் போட்டியில் தேசத்துக்காக விளையாடுவது பெரிய பெருமை. இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இதனிடையே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலில் தோல்வியடைந்து இழப்பாக தெரியவில்லை. இந்த ஆண்டு இன்னும் அதிக போட்டிகள் உள்ளன. இதில் கோப்பை வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு மரியா ஷரபோவா கூறினார்.