லிங்கு படத்தில் இருந்து ஆர்யா விலகல்?!

இயக்குனர் லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடித்த ஆர்யா, லிங்குவின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கவிருக்கும் படத்தில் இருந்து திடீரென விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் இருந்து விலக ஆர்யா, ஸ்க்ரிப்ட் தனக்கேற்ற மாதிரி இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நொண்டி சாக்கை மறுக்கும் கோடம்பாக்க பட்சி, தற்போது செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஆர்யா, படம் முடிந்த கையோடு, ஜெயம்கொண்டான்’ கண்ணன் இயக்கத்தில் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘டெல்லி பெல்லி’ படத்தின் ரீமேக்கில் நடிக்க ஓ.கே. சொல்லிவிட்டாராம். ஆர்யாவுடன், சந்தானமும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் வெற்றி, ருசி கண்ட பூணையாக ஆர்யாவை டெல்லி பெல்லி ரீமேக்கிற்கு ஓகே சொல்ல வைத்து விட்டதாக கிசுகிசுக்கிறது அந்த பட்சி!

ஆனால் இயக்குனர் சரவணன் சொன்ன கதை பிடிக்காமல் தான் அந்தப் படத்தை தள்ளிப்போட்டதாக வந்து கொண்டிருக்கும் செய்திகளை கடுமையாக மறுக்கிறார் ஆர்யா என்கிறது ஆர்யாவுக்கு நெருங்கிய வட்டாரம். மேலும், கதை பிடிக்கிறதோ இல்லையோ லிங்குசாமி சாரின் நட்புக்காகவே அவரது நிறுவனத்துக்கு கண்டிப்பாக ஒரு படம் நடித்துக் கொடுப்பேன் என ஆர்யா கூறியுள்ளதாகவும் தகவல்கள் காற்றில் மிதக்கின்றன.

எது உண்மை ஆர்யா?!