தேடல்

வளர்ச்சி பணிகளுக்கு ஆளுங்கட்சியினரே முட்டுக்கட்டை : அ.தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் விரக்தி

விருத்தாசலம் :விருத்தாசலத்தில், நகர வளர்ச்சிப் பணிகளுக்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்களே முட்டுக்கட்டை போடுவதால், மன உளைச்சலில் உள்ளேன் என, நகராட்சி தலைவர் கூறினார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்துள்ள பன்றிகள் நடமாட்டத்தைக் குறைக்க, நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம், மதுரையிலிருந்து 15 பேர் கொண்ட குழுவினர் வரவழைக்கப்பட்டு, பன்றிகள் பிடிக்கப்பட்டன. இதற்கு, பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக, ஆளும் கட்சி கவுன்சிலர்கள் குரல் கொடுத்ததால், பன்றிகள் பிடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த விருத்தாசலம் நகராட்சி தலைவர் அரங்கநாதன் கூறியதாவது: டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, பன்றிகள் பிடிக்கும் பணி துவங்கியது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பன்றிகள் பிடிப்பவர்களை மிரட்டி, தடுத்து நிறுத்தியுள்ளனர். விருத்தாசலம் நகராட்சியில், வளர்ச்சித் திட்டப் பணிகள், நகர சபை கூட்டம் என, எதையும் நடக்க விடாமல், அ.தி.மு.க., கவுன்சிலர்களே தடுக்கின்றனர். சுகாதார பராமரிப்பு பணிகளுக்கும், முட்டுக்கட்டை போடுகின்றனர். தொடர்ந்து, நகர சபை கூட்டம் இரண்டு முறை முடங்கியது. அமைச்சர் சம்பத் தலையிட்டு, குறுக்கீடுகளைத் தடுத்து, நகரின் வளர்ச்சிப் பணிகள் நடக்க உதவ வேண்டும். நகர மன்ற கூட்டம் உள்ளிட்ட எந்தப் பணியும் நடைபெறாதால், கடும் மன உளைச்சலில் உள்ளேன். இவ்வாறு, நகராட்சி தலைவர் அரங்கநாதன் கூறினார்.