மதுரை : பிஸ்கட்
தயாரிப்பிற்கு கலால் வரிச்சட்டத்தில், விற்பனை விலை உச்சவரம்பை உயர்த்த
வேண்டும், என, உணவு பொருள் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வியாபாரிகள்
சங்கத் தலைவர் ஜெயப்பிரகாசம் தலைமையில் நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள்
மற்றும் கலால்வரி ஆணையத் தலைவரிடம் மனு கொடுத்தனர். மனுவில்
கூறியிருப்பதாவது: சங்கத்தைச் சேர்ந்த பிஸ்கட் தயாரிப்பாளர்களால்,
பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை உத்திகளை சமாளிக்க இயலவில்லை. மத்தியஅரசிடம்
கோரியதை அடுத்து, சுங்கத் தீர்வையில் இருந்து விலக்களிக்கும் விலையாக,
கிலோவுக்கு ரூ. 100 நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது மூலப்பொருட்களின் விலை
அதிகரிப்பால், ஒரு கிலோ பிஸ்கட் தயாரிப்பு ரூ. 100 ஐ தாண்டி விட்டது. இந்த
வரம்பை ரூ. 150 ஆக அதிகரிக்க வேண்டும். ஐந்து ஆண்டு விலை உயர்வால், ஒரு
கிலோவுக்கு ரூ.100 விலையில், பிஸ்கட்களை தயாரிக்க முடியாது. உச்சவரம்பை
உயர்த்தாவிட்டால், கடைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை. தொழிலாளர் வேலை
இழப்பர், என கூறியுள்ளனர்.
